50 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம்!


ஆசிரியர் சேவையில் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன ஒழுங்கு விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றது.

Posted on:
2017-03-17 13:20:40

50 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம்!

தற்பொழுது ஆசிரியர் சேவையில் 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற 238 பேருக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் சேவையில் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன ஒழுங்கு விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றது.

ஆசிரியர் பயிற்சிக்காக வரவுசெலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை பயிற்றுவிப்பாளர்களாக 3 ஆயிரத்து 850 பேரை பயிற்றுவித்து சேவையில் இணைத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற எண்ணக்கருவிற்கு உட்பட்ட திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதற்காக 700 பாடசாலைகளில் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை பாடசாலைக்கு உட்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.